ராஜஸ்தானில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும்,பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
ராஜஸ்தானில் 50 நகராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. மொத்தம் 1,775 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 620 இடங்களைப் பெற்று ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளினர். 596 இடங்களில் வென்ற சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும், 548 வார்டுகளில் வென்று பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
பாஜக கோட்டை என கருதப்பட்ட பல நகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் 10 வார்டுகளில், 6 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
நகராட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட் செய்துள்ளார். அதில், காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும்,கட்சியின் வெற்றிக்குக் கடினமாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.