பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், தற்போதைய மோசமான சந்தை நிலவரம், ஏற்கனவே தவறவிட்ட வாய்ப்பாக தெரிகிறது என எச்சரித்துள்ளார். ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) தரவுகள் நமக்கு எல்லாம் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
23.9 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம், அமைப்பு சாரா துறையின் தரவுகள் வரும்போது இன்னும் மோசமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ராஜன், கொரோனாவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட இந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். வைரஸ் இருக்கும் வரை இந்தியாவில் விருப்ப செலவு பலவீனமாக இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.
அரசால் வழங்கப்படும் நிவாரணம் மிக முக்கியமானது என்று தெரிவித்த ரகுராம் ராஜன், தற்போதைய சந்தை நிலவரத்தை நாம் ஏற்கனவே தவறவிட்டுள்ளோம் என்றார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க பின்வரும் ஆலோசனைகளை ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
- ஏழைக் குடும்பத்தினருக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் மேலும் பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நகர்ப்புறங்களில் இதனை செய்ய வேண்டும்.
- இவ்வாறு பண உதவியை அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் விரைவில் செய்ய வேண்டும்.
- கார்பரேட் வருமான வரி மற்றும் சிறு நிறுவனங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்யலாம்.
- பொதுத்துறை வங்கிகளை மறு மூலதனமாக்க வளங்களை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு ரகுராம் ராஜன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.