இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்களது வலியையும் வெளிப்படுத்தும் வகையில் 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பாடலை எழுதி, பாடிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் அறிவு இது குறித்து காணொலி விவாதத்தில் பங்கேற்றார். அதில், இலங்கை மலையக சமுதாய இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர். அந்த காணொலி விவாதத்தில், அனைவரையும் கட்டிப்போட்ட ஒரே நபர், இலங்கை மலையக சமுதாயத்தினரின் வரலாற்றுடன் தொடர்புடைய அறிவுவின் பாட்டி வள்ளியம்மா.
வள்ளியம்மா பாட்டியை குறிப்பிட்டு அந்த பாடலில் வரி வரும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான இந்த பாடலை உலகம் முழுவதும் இருந்து 20 கோடி பேர் பார்த்ததின் மூலம், வள்ளியம்மா பாட்டியின் கதை 20 கோடி பேரிடம் சென்றடைந்திருக்கிறது.
இலங்கை தேயிலைத் தோட்டங்களில் உழைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களில் ஒருவராக வள்ளியம்மா இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் நெற்றி வியர்வை சிந்த உழைத்த அந்த பெண்மணி, சொந்தமாக நிலம் கூட இல்லாத நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். வள்ளியம்மா பாட்டியைப் போன்று ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். மீதமிருந்த ஆயிரக்கணக்கானோர், அங்கேயே தங்கியிருந்து தேயிலை பறித்து, அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப உதவினர்.
இந்த பாடலுக்கு வள்ளியம்மா என்று பெயரிடப்பட்டாலும், மலையக தமிழர்களின் கதையைச் சொல்லத் தொடங்கும் ஒரு தீப்பொறியாக இருக்கக் கூடும் என்று இந்த விவாதத்தில் பங்கேற்ற தோட்ட உரிமைகள் மற்றும் பாலின பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பணிபுரியும் கண்டியைச் சேர்ந்த ஆர்வலர் சவும்யா விலாஷிணி முத்துலிங்கம் குறிப்பிட்டார். இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி அறிய தமிழகம் என்றுமே ஆர்வமாக இருந்ததில்லை என்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ”2008 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் பெங்களூருவில் படித்தேன். இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, இந்தியாவில் உள்ள தமிழர்கள் அதனை ஆர்வமுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்திலும், அதற்குப் பின்னரும் மலையக தமிழர்களை இந்தியத் தமிழர்கள் கண்டுகொள்ளாததைக் கவனித்தேன். அவர்களது கவனம் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்கள் மீதே இருந்தது.
எனது பார்வையில், இது இலங்கைக்குள் காணப்பட்ட சமூக பாகுபாடு மற்றும் அலட்சியத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வாழ்ந்த அந்நாட்டுத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களை மரியாதைக்குறைவாக நடத்தினார்கள். நில உரிமை மற்றும் வீடுகள் விஷயத்தில் அங்கு குடியேறிய மலையக தமிழர்களை, இலங்கைத் தமிழர்கள் பாகுபாடாக நடத்தினர்.
இலங்கையின் அழகிய மலை நாட்டில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற, தமிழக தமிழர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர் ஆங்கிலேயர்கள். அப்போதிலிருந்து தமிழ் சமூகத்தின் வரலாறு இரண்டு நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.
மலையகத் தமிழர்கள் நிலையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இருந்தபோதிலும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டே, நியாயமான கூலிக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழர்களின் வெவ்வேறு குழுக்களின் சமூகப் பிரச்சினைகள், மலையக தமிழர்களின் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இது ஓர் அரசியல் என்கிறார் சவும்யா விலாஷினி முத்துலிங்கம். இது குறித்து அவர் கூறும்போது, ” இலங்கையிலோ அல்லது தமிழகத்திலோ மக்கள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் வீரப் போராட்டமாகக் கருதப்படுவதில்லை. சுயமரியாதையை இழந்த உங்கள் தட்டில் வைக்கப்படும் உணவை முக்கியமானது என்று என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.
இந்த காணொலி விவாதத்தில் பேசிய அறிவு சாதிய அரசியலைச் சுட்டிக்காட்டினார். தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் அவரது படைப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இவை தன் குடும்பத்துடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விளக்கினார்.
இது குறித்து அவர் கூறும்போது, ” சாதி இல்லை என்று இன்று சொல்பவர் கூட, ஒரு சாதிய நிலையிலிருந்து தான் சொல்ல முடியும். எங்கள் காலடியின் கீழ் கிடக்கும் மண், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையின் வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சாதிகளுக்கு ஆதரவாக இருக்கப் போகிறோமா? அல்லது சமத்துவத்துடன் வாழப்போகிறோமோ? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
கூத்துக் கலைஞர்களாகவும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் எங்கள் குடும்பம் நடத்திய போராட்டத்தை மறக்க முடியாது. நாங்கள் வந்த சமுதாயம் எங்களை சாதிய அடையாளப்படுத்துகிறது. இவை அனைத்தும் அரசியல் காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையிலிருந்து எங்களால் அரசியலை வெளியே தூக்கி எறிந்துவிட முடியாது” என்றார்.
மலையக தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினரான மயில்வாகனன் திலகராஜா கூறும்போது,” தமிழர்கள் வாழும் தமிழகம், மலேசியா அல்லது யாழ்ப்பாணத்தை விட, மலையகத்தில் சாதி ரீதியான வன்முறை குறைவாகவே இருந்தது. தோட்டத் தொழிலாளராக இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய வள்ளியம்மாவை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர் என்று சாதிய குழுவைப் போலவே முத்திரை குத்தப்பட்டுள்ளது. கே.ஏ. குணசேகரன், ரா.வினோத், தமிழ்மகன் மற்றும் முகமது யூசுப் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் மலையகத் தமிழர்கள் பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் எவ்வளவோ எழுதியுள்ளார்கள். எனினும். அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் இன்றைக்குக் கோடிக்கணக்கானோரைச் சென்றடைந்திருக்கிறது.
‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் முற்போக்கு அரசியலை முன்னெடுக்க அறிவு முயன்றிருக்கிறார். இந்த பாடலில் வள்ளியம்மாவை பற்றிக் குறிப்பிட்டது முக்கியமானது. எனினும், வள்ளியம்மாவை போன்றோரின் கதைகளும், இலங்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக தமிழர்களின் கதைகளும் விரிவாகப் பேசப்பட வேண்டும். அந்த கதாபாத்திரங்கள் பேசக்கூடிய முழுமையான திரைப்படம் நமக்குத் தேவை.
இலங்கைக்குள்ளும், இந்தியாவுக்குத் திரும்பியோர் மத்தியிலும் சாதி எவ்வாறு விளையாடியது என்ற கதை பெரிதாகச் சொல்லப்பட வேண்டும். எங்கள் மக்களில் சிலர் திரும்பி வந்தது, தோட்டங்களைத் தற்காலிகமாக விட்டு வந்ததாக அர்த்தம். அந்த சமயம் சாதி வேறுபாடுகள் உடைத்தெறியப்பட்டன. மேலும், இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியாக நில உரிமைகள், வீட்டு வசதி மற்றும் நல்ல சம்பளத்துக்காக அணி திரட்டியிருப்பது, சாதி அடையாளத்தை விட வலுவான வர்க்க அடையாளத்தை உருவாக்கியிருப்பதாக அர்த்தம். எங்கள் மக்களின் கதைகளை நீங்கள் சொல்லும்போது, இதையும் சேர்த்துச் சொல்லுங்கள். மலையகத் தமிழர்கள் பற்றிய நல்ல திரைப்படம் வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்” என்றார்.