கடந்த ஓராண்டாக கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் கொரோனா வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், கொரோனாவை விட கொடுமையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் புதிதாக 38 கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள். வழக்கம்போல் பிரதமர் மோடியின் உயிர் தோழர்களான அம்பானியும் அதானியும் இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 140 கோடீசுவரர்களைப் பெற்று இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
கடந்த ஆண்டு 102 ஆக இருந்த கோடீசுவரர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கொரோனா காலத்தில் நாடே முடக்கப்பட்ட நிலையிலும், 38 கோடீசுவரர்கள் உருவாகியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு 596 பில்லியன் அமெரிக்க டாலராகும். உலக அளவில் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு 313 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது இரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் முன்னாள் தலைவர் சிவ்நாடாருக்கும் இடையே 100 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு இடைவெளி உள்ளது.
உலக அளவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2,755 கோடீசுவரர்களில் 660 பேர் புதிய கோடீசுவரர்கள். அமெரிக்காவில் 724 புதிய கோடீசுவரர்களும், சீனாவில் 698 புதிய கோடீசுவரர்களும் உருவாகியிருக்கிறார்கள்.
அமேஜான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் நான்காவது முறையாக உலகின் முதல் பணக்காரராக நீடித்து வருகிறார். இவரது சொத்து மதிப்ப 177 பில்லியன் டாலர் ஆகும். இவரைத் தொடர்ந்து எலோன் மஸ்க் 151 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகளைப் பெற்று உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு 24.6 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று 31 ஆவது இடத்திலிருந்த மஸ்க், தற்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. லூயிஸ் உய்ட்டன் எஸ் இ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பெர்னார்டு அர்னால்ட், 150 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 3 ஆவது உலக பணக்காரராக இருக்கிறார்.
இந்திய கோடீசுவரர்கள் பட்டியல்:
உலக அளவில் 10 ஆவது பணக்காரராக அம்பானி இருக்கிறார். 84.5 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகளுடன் ஆசியாவிலேயே முதல் பணக்காரராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலராக இருந்தது. கொரோனாவால் நாடே முடங்கிய ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்கது.
2020 செப்டம்பர் மாதம் மும்பை விமானநிலையத்தில் 74 சதவிகித பங்குதாரரானார் கவுதம் அதானி. இவர், 50.5 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளைப் பெற்று உலக அளவில் 24 ஆவது பணக்காரராக இருக்கிறார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ் நாடார் இந்தியாவின் மூன்றாவது பணக்காரராக உள்ளார். 23.5 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று உலக அளவில் 71 ஆவது பணக்காரராக இருக்கிறார்.
டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமணி 16.5 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று இந்தியாவின் நான்காவது பணக்காரராக இருக்கிறார். இவரைத் தொடர்ந்து இந்தியாவின் பணக்கார வங்கியாளரும் கோடக் மஹிந்த்ரா வங்கியின் நிர்வாக இயக்குநருமான உதய் கோடக் இந்தியாவின் 5 ஆவது பணக்காரராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலர் ஆகும்.
ஏர்செலர்மிட்டல் எஃகு ஆலையின் நிர்வாகத் தலைவராக இருக்கும் லக்சுமி மிட்டல், 14.9 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியாவின் 6 ஆவது பணக்காரராக உள்ளார்.
சிரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவாலா 12.7 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று இந்தியாவின் 7 ஆவது பணக்காரராகவும், சன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனர் திலீப் சங்வி 10.9 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 8 ஆவது பணக்காரராகவும், பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் 10.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியாவின் 9 ஆவது பணக்காரராக இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கோடீசுவரர்கள்:
1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்த ஆண்டு இந்தியாவில் புதிய பணக்காரர்கள் அடி எடுத்து வைத்துள்ளார்கள். இதில் மெட்ரோ பிராண்டின் தலைவர் ரஃபிக் மாலிக், கஜாரியா செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் அசோக் கஜாரியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸின் டி.எஸ். கல்யாணராமன் ஆகியோர் அடங்குவர். மேலும், ரெலாக்சோ ஃபுட்வியர்ஸில் பெருமளவு பங்குகளை பெற்றதன் மூலம் முகுந்த்லால் துவா மற்றும் அவரது இளைய சகோதரர் ரமேஷ் குமார் துவா ஆகியோரும் கோடீசுவரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்திய பெண் கோடீசுவர்கள் பட்டியல் :
இந்தியாவிலேயே முதல் பெண் கோடீசுவரராக ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். 12.8 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று, உலக அளவில் இவர் 166 ஆவது கோடீசுவரராக இருக்கிறார்.
பைகான் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கிரன் மஜும்தார் ஷா 4.2 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று ந்தியாவின் இரண்டாவது பெண் பணக்காரராக இருக்கிறார். உலக அளவில் இவர் 681 ஆவது பணக்காரராக இருக்கிறார். கோத்ரெஜ் கிளான்ஸின் ஸ்மிதா கிரீஷ்ணா கோத்ரெஜ் 2.4 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியாவின் 3 ஆவது பெண் பணக்காரராக இருக்கிறார். ஜெகே சிமிண்ட்ஸின் கவிதா சிங்கானியா 4 ஆவது பெண் பணக்காரராக சமீபத்தில் இணைந்துள்ளார். இவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் பேத்தி ஆவார்.