தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானை மதுரா சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய, உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த பேராட்டத்தின் போது, ஆத்திரமூட்டும் வகையிலும், அவதூறாகவும் டாக்டர் கஃபீல் கான் பேசியதாகக் கூறி, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.
7 மாதங்களுக்கும் மேலாக டாக்டர் கான் சிறையில் இருந்த நிலையில், மகனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கஃபீல் கானை கைது செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தனர். அதோடு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை உடனே விடுதலை செய்யுமாறும் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில், டாக்டர் கான் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை. வெறுப்பூட்டும் வகையிலோ, வன்முறையை தூண்டும் வகையிலோ அல்லது அலிகார் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதாகவோ அவரது பேச்சு இல்லை. இவற்றை எல்லாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அவரது பேச்சின் உண்மையான உள்நோக்கத்தை கவனிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தவறிவிட்டது” என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து கான் கூறும்போது, ” 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, தம்மை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, பெரும் விலையை கொடுத்துள்ளேன். அலிகார் பல்கலைக் கழகத்தில் ஒற்றுமை மற்றும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டத்தை வலியுறுத்தியே பேசினேன்.
கொரோனா பரவல் குறித்து நான் பேசிவிடுவேன் என்ற காரணத்துக்காக என்னை 2022 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயல் இழந்துவிட்டது. அதைப் பற்றி நான் பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். என் வாயை அடைப்பதற்காகவே அவர்கள் என்னை தொடர்ந்து சிறையில் வைக்க முடிவு செய்தனர்” என்று தெரிவித்தார்.
சட்ட நிபுணர்கள் கருத்து
டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்குரைஞர் ரிபெக்கா ஜான், ”எந்த கேள்வியும் இல்லாமல், ஒருவரை ஓராண்டுக்கு சிறையில் தள்ளும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை தண்டிக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். 90 சதவிகித வழக்குகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இல்லை. கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற பணிகளும் முடங்கியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
உள்துறை முன்னாள் செயலர் ஜி.கே.பிள்ளை கூறும்போது, ”தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறையும்” என்றார்.
மூத்த வழக்குரைஞர் கொலின் கொன்சால்வே கூறும்போது, ”தவறான உத்தரவுகள் பெரும் அநீதிக்கு வழி வகுத்துவிடும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, உச்ச நீதிமன்றமும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அரசு தரப்பு சமர்ப்பிக்கும் ஆவணங்களே விசாரணைக்கு சாட்சியம் என்றும், விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்டவர் ஜாமீன் கோரினால் இந்த ஆவணங்களின் அடிப்படையில் அதை நிராகரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது. பொருந்தாத மற்றும் தவறான இந்த தீர்ப்பால், நாட்டில் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.