மத்திய அரசின் சுதந்திரமான அமைப்பான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் பொருளாதார சமிக்ஞைகள் மற்றும் அளவீடுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கொரோனா காலத்தில் மாத ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை, 1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
பொது முடக்கத்துக்குப் பிறகு, மாத ஊதியம் பெறுவோரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 1 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் பேரும், மே மாதத்தில் 1 லட்சம் பேரும் வேலை இழந்துள்ளனர். அதேசமயம், கடந்த ஜுன் மாதம் 30 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், 50 லட்சம் பேர் மீண்டும் வேலை இழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிஎம்ஐஇ தலைவர் மகேஷ் வியாஸ் கூறும்போது, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கடந்த ஏப்ரலில் 1 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர். ஆனால், ஜுலை மாதத்தில் 1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம் மாதந்தோறும் ஊதியம் பெறுவோர் வேலை இழந்துள்ளனர்.
மாத ஊதியம் பெறுவோருக்கான வேலை வாய்ப்பு எளிதில் பறிபோகாது. ஒருவேளை பறிபோனால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம். ஊதியம் பெறும் வேலைகள் கடந்த ஆண்டு சராசரியைவிட, நடப்பாண்டில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 22 சதவிகிதம் குறைவாக உள்ளது.முறைசாரா மற்றும் மாத ஊதியம் பெறாத ஊழியர்களிடையே வித்தியாசம் உள்ளது. வேலை இழந்த மாத ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை ஜுலை மாதத்தில் 30 கோடியே 17 லட்சத்து 6 ஆயிரத்திலிருந்து 30 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றார்.
பொது முடக்கம் தொடங்கியதும், கடந்த ஏப்ரல் மாதம் தினக் கூலி தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
ஏப்ரல் மாதத்தில் 10 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரம் பேர் வருவாயை இழந்தனர். இவற்றில் முறைசாரா பணிகளும் அடங்கும். மொத்தமுள்ள வேலை வாய்ப்புகளில், இந்த பிரிவினர் மட்டும் 32 சதவிகிதம் உள்ளனர். ஆனால், ஏப்ரல் மாதத்தில் இவர்கள் தான் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டதாக சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் முறைசாரா பணிகளில் 91 லட்சத்து 2 ஆயிரம் பேர் வேலையிழந்தனர். மே மாதத்தில் 1 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரம் பேர் மீண்டும் வேலைவாய்ப்பை பெற்றனர். ஜுன் மாதம் 4 கோடியே 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும், ஜுலை மாதத்தில் கூடுதலாக 2 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மீண்டும் வேலை வாய்ப்பை பெற்றனர் என்று அந்த புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.
இழந்த வேலை மீண்டும் கிடைத்தாலும், ஆரோக்கியமற்ற மற்றும் ஊதியத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, மீண்டும் கிடைக்கும் வேலை என்பது திருப்திகரமாக இருக்காது என்பதே உண்மை.