அயோத்தியில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்த ராமர் கோயில் கட்டும் பூமி பூஜை விழா என்பது, சில அரசியல் விளைவுகளுடன் சிறிய நிகழ்வாக மாறும் என்று நான் எழுதியது பா.ஜ.கவினருக்கு துஷ்பிரயோகமாக தெரிந்தது. அதனால் அவர்கள் என்னை திட்டித் தீர்த்தனர்.
இந்தியாவில் ஏற்கனவே லட்சக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதோடு சேர்த்து அயோத்தியில் ஒரு ராமர் கோயில், அவ்வளவுதான் என்று நான் சொன்னேன். இந்து மதத்தைப் பற்றி எதுவும் தெரியாத, ஒரு நோய்வாய்ப்பட்ட நாத்திக, இடதுசாரிகளின் ஏமாற்றமளிக்கும் மோசடி என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கெல்லாம் பதில் அளிக்க என் தாயாரை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ரிஷிகேஷில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் வாழ்ந்தார். அதன்பிறகு சன்னியாசியாக மாறினார். அவர் இந்து பக்தை. இருந்தாலும், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை கும்பல் ஒன்று இடித்ததை அவர் ஆதரித்திருப்பாரா? இல்லை. அவர்களை குண்டர் என்று அழைத்திருப்பார். இது, இந்து மதத்தில் நல்லவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவை ஏதோ எல்லா இந்துக்களுக்குமான பெரிய நிகழ்வு போன்று ஊடகங்கள் மிகைப்படுத்தின. ஆனால், அந்த விழா இந்துத்வாக்களுக்கானது, இந்துக்களுக்கானது அல்ல. அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டுவதற்கு தரப்படும் பிரம்மாண்ட விளம்பரம் குறித்து என் தாயார் கேள்வி எழுப்பினார். பெருவாரியான இந்துக்களைப் பொறுத்தவரை, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் என்பது, உள்ளூர் கோயில் அவ்வளவுதான். அதனை, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களான திருப்பதி, வாரணாசி, தஞ்சாவூர், பத்ரிநாத், பூரி. வைஷ்ணவ தேவி அல்லது ஷிர்டி ஆகியவற்றுடன் ஒப்பிடமுடியாது.
இந்து சட்டத்தின்படி கட்டப்படும் கோயில்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளதை என் தாயார் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடெல்லியில் என் தந்தை விநாயகர் கோயிலை கட்டினார். இதற்கும் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா? நிச்சயமாக இல்லை. கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையால் கலவரம் ஏற்பட்டபோது, எங்கள் குடும்பம் சிம்லாவில் இருந்தது. இந்து கும்பலால் துரத்தி வரப்பட்ட முஸ்லீம் குடும்பம் ஒன்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்தது. விரட்டி வந்த கும்பல் தேடிப் பார்த்துவிட்டு போகும்வரை, அவர்களை என் தாயார் பாதுகாப்பாக அடைத்து வைத்திருந்தார். இப்போது சொல்லுங்கள்..இந்து மதத்தின் பிரதிநிதி யார்? விரட்டி வந்த இந்து கும்பலா அல்லது என் தாயாரா?
என்னுள் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்த என் தாயார் விரும்பினார். இன்னும் என்னுள் இருக்கும் நாத்திகத்தைப் பார்த்து புன்னகைத்தேன். இந்து மதத்துக்குள் இருக்கும் சார்வகா தத்துவவியல் பள்ளி போன்ற நாத்திக மரபுகள் என்னுள் இருப்பது தெரிந்தது. இந்துத்வாவாதிகள் இதனை அறிந்திருக்கவில்லை. எது எப்படியோ, மதச்சார்பற்றவர்களைவிட, சிறிய எண்ணிக்கையிலான நாத்திகர்களைப் பற்றி சிறிதே அவர்கள் கவலைப்படுகிறார்கள். மதச்சார்பின்மை இந்துவுக்கு எதிரானது அல்லது இந்துயிசத்தை வீழ்த்த வந்துள்ளதாக எண்ணுகிறார்கள்.
மகாத்மா காந்தியை இந்து பக்தர் என்ற வகையில், கேள்வி எழுப்ப முடியாது. அவரும் அடிப்படையில் மதச்சார்பற்றவரே. இந்த இரண்டு விசயங்களுக்கும் இடையே எவ்வித முரண்பாட்டையும் காண முடியவில்லை. ”கடவுளை பல பெயர்கள் சொல்லி மக்கள் அழைக்கிறார்கள். அவர்களுக்கு வேறுபட்ட மதங்கள் உள்ளன. ஆனால், அனைவரும் ஒரே பரிசுத்தவானிடம் தான் பிரார்த்தனை செய்கின்றனர்” என்றார் மகாத்மா காந்தி. இதுதான் அவர் கட்டமைத்த மதச்சார்பின்மையும், அனைத்து மதத்தவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுமாகும். மதச்சார்பின்மையால் இந்துயிசத்துக்கு எவ்வித மரியாதைக்குறைவும் ஏற்பட்டு விடாது. ஆனால், எல்லோரையும் மதிக்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் நோக்கமாக உள்ளது.
தனிமனித உரிமைகளுக்கான கோட்பாடுகளிலும், மற்றவர் நம்பிக்கையை மதிக்க வேண்டியது கடமை என்பதிலும், மற்றவர் மீது கருத்துகளை திணிக்கக் கூடாது என்பதிலும் மகாத்மா காந்தி நம்பிக்கை உடையவர். எனினும், இந்து அல்லாதவர்கள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை அவர் ஆதரித்தார். இந்து என்பதை விட, தினமும் பிரார்த்தனை செய்பவராகவும் மகாத்மா காந்தி இருந்தார். அதிகபட்ச மதச்சார்பற்றவராக இருந்ததால் தான், நாதுராம் கோட்சேவால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதும் அவரது கடைசி வார்த்தை ‘ஹே ராம்…’ என்றே ஒலித்தது. இப்போது சொல்லுங்கள்… பாஜகவினர் வழக்கமாக பயன்படுத்தும் மதச்சார்பற்ற பிணியாளரா அவர்?
தாங்கள் மட்டுமே இந்து மதத்தின் உண்மையான பிரதிநிதிகள் என இந்துத்வா கூட்டம் ஒன்று இன்று சொல்லிக் கொண்டு திரிகிறது. இந்த கும்பலால் மகாத்மா காந்தியின் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த முடியாது. அதேசமயம், அவர்கள் கருத்து கோட்சேவை வணங்குவதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பிராக்யா தாகூர், கோட்சே தலைசிறந்த தேசியவாதி என்று உரக்கச் சொன்னார். இதனையடுத்து, பிராக்யா தாகூரை மோடி கண்டித்தார். இந்துத்வா கும்பல் கோட்சேவுக்கு பல இடங்களில் சிலை வைத்துள்ளது. குவாலியரில் உள்ள இந்து கோயில் ஒன்றில் அவரை கடவுளாக வணங்குகின்றனர். மீரட் நகருக்கு கோட்சே பெயரை சூட்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தேசித்துள்ளார்.
இந்திய நாத்திகவாதிகளைப் பற்றி விக்கிப்பீடியாவில் தேடினேன். அதில், என் பெயரும், இந்துத்வாவை உருவாக்கிய வினாயக் தாமோதர் சாவர்கர் பெயரும் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இந்துக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தவர் சாவர்கர். மத ரீதியான கோட்பாடுகளை விட, அரசியல் கலாச்சார கோட்பாடுகளை கொண்டது இந்துத்வா என்ற கருத்துடையவர். அவரது சில பேச்சுகளில், தம்மை நாத்திகவாதி என்று அறிவித்துக் கொண்டவர். இந்துயிசத்தை பெருமளவு நவீனப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த சந்தான் தர்மாவையும் அவர் நிராகரித்தவர். மாடுகளில் புனிதம் ஏதுமில்லை என்று கூறிய அவர், சைவ உணவை கைவிடுமாறு இந்துக்களை அறிவுறுத்தினார். சாவர்கரின் சுயசரிதையை எழுதிய தனஞ்ஜய் கீர் கூறும்போது, ”தனது மனைவி இறந்தபோது, இந்து முறைப்படி சடங்குகள் செய்யுமாறு ஆதரவாளர்கள் விடுத்த வேண்டுகோளை சாவர்கர் நிராகரித்துவிட்டதாக” குறிப்பிட்டுளார். இதுபோன்ற செயலுக்கு இந்துத்வாவாதிகள் முன்னுரிமை கொடுக்க வாழ்த்துகிறேன்.
”முதலாவதாக, இந்து கும்பலிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்பவரே இந்துவாக இருக்க முடியும். இரண்டாவதாக, பெரும்பான்மையான இந்துக்கள் தீவிர மதசார்பற்றவர்களாக இருக்க முடியும். மூன்றாவதாக, இந்துத்வா என்பது இந்து மதத்தை வளர்ப்பதாக அல்ல. இந்து பெரும்பான்மையை வளர்ப்பதற்காகவே…”
என் தாயார், காந்தியடிகள் மற்றும் சாவர்கர் ஆகிய மூவரின் உதாரணங்களில் இருந்து கற்கவேண்டிய பாடம் இவை.
கட்டுரையாளர்: எகானமிக்ஸ் டைம்ஸ் ஏட்டின் ஆலோசனை ஆசிரியராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.