மகாத்மா காந்தி மற்றும் அவரை படுகொலை செய்தவனின் மரபுரிமையை ஆர்.எஸ்.எஸ். கோருவது வேடிக்கையாகவும், மூர்க்கத்தனமாகவும் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைஷரில் எழுதப்பட்ட தலையங்கத்தில், மகாத்மா காந்தியை தங்கள் மரபுரிமையாக காங்கிரஸ் கட்சி கோர முடியாது என்றும், சங்பரிவாருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எழுதியுள்ள கட்டுரையில், மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதைப் படிக்கும் அப்பாவி வாசகர்ளுக்கு மகாத்மா காந்தி மீது மதிப்பும் பக்தியும் ஏற்படும். அதேசமயம், மகாத்மா
காந்தியை நாதுராம் கோட்ஸே படுகொலை செய்ததை நியாயப்படுத்திய பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யாவை கட்சியிலிருந்து வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை அப்பாவி வாசகர்கள் கேட்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரும், பிரதமரும் மகாத்மா காந்தியை புகழ்ந்து எழுதுகிறார்கள். ஆனால், சாத்வி பிரக்யா மீது மட்டும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். இப்படி இருக்கும் போது, மகாத்மா காந்தியையும், அவரை படுகொலை செய்த நாதுரான் கோட்சேவையும் நீங்கள் எப்படி மரபுரிமை கோர முடியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இரண்டு நாக்குகள் இருப்பது தெரியும். இப்போது 3 ஆவது நாக்கு முளைத்துள்ளதா?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு மகாத்மா காந்தி வந்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வாழ்த்தியதாகவும் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அடிக்கடி சொல்வது வழக்கமாகியிருக்கிறது. மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியதற்கான ஆதாரத்தை இவர்களால் வெளியிட முடியுமா?
1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானது. 1925 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை, இரு மாபெரும் போராட்டத்தை காந்தி நடத்தினார். 1930 முதல் 1932 வரை நடந்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் 1942 ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பங்கேற்றது உண்டா? அப்போது தலைவராக இருந்த ஹெட்கேவார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவும் இல்லை, சிறைக்குச் செல்லவும் இல்லை என்பதுதான் வரலாறு. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
சுதந்திரப் போராட்டதின்போது, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான நிலையையே இந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் எடுத்தார். இதனைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி நிற்குமாறு தன் தொண்டர்களை கேட்டுக் கொண்டதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருமாறும், சிந்து மாகாணத்தில் முஸ்லீம் லீக்குடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்குமாறும் சாவர்கர் கேட்டுக் கொண்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.
அந்த சமயத்தில் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், நேரு, மவுலானா ஆஜாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் இருந்தனர். இப்போது மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ், மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு போராட்டமாவது நடத்தியிருக்குமா?
ஆர்.எஸ்.எஸ். குறித்து மகாத்மா காந்தி தெரிவித்த கருத்துகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள், அல்லது மறைத்துவிடுகிறார்கள்.
டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகாத்மா காந்திக்கு அனுப்பிய புகாரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லத்தி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்று கோஷமிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பயிற்சி முகாமில் பேசியவர்கள், ”முதலில் ஆங்கிலேயர்கள் வெளியேறட்டும், அதன்பின்னர் முஸ்லீம்களை அடிபணிய வைப்போம். நாம் சொல்வதை அவர்கள் கேட்காவிட்டால், அவர்களை கொல்லுவோம்” என்று சூளுரைத்தனர். இதனையும் காந்தியடிகள் பார்வைக்கு டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கொண்டு சென்றார்.
இது குறித்து தமது ஹரிஜன் பத்திரிகையில் எழுதிய மகாத்மா காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோஷங்கள் தவறானவை. இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் இந்த நாடு சொந்தமானதே. சுதந்திர இந்தியாவில் இந்து ராஜ்யத்துக்கு வாய்ப்பு இல்லை. மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். இதனை அரசியல் ஆக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
“இந்த முழக்கங்கள் தவறானதும் அபத்தமானதும் ஆகும். இங்கு பிறந்து வளர்ந்த அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு எந்த நாடும் இல்லை. எனவே, பார்சிகள், இந்திய கிறிஸ்தவர்களாக மாறிய பெனி இஸ்ரேலியர்கள், முஸ்லீம்கள் மற்றும் மற்ற இந்து மதத்தை சாராத அனைவரும் இந்துக்களைப் போன்றவர்கள் தான். சுதந்திர இந்தியா இந்து ராஜ்யமாக இருக்காது. அது, பெரும்பான்மை கொண்ட எந்த மதத்தின் பிரிவாகவோ, சமூகத்தின் அடிப்படையிலோ இல்லாமல் இந்திய ராஜ்யமாக இருக்கும். ஆனால், அனைத்து மக்களின் பிரதிநிதிகள் மத வேறுபாடு இல்லாதவர்களாக இருப்பர்… மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு அரசியலில் இடம் இல்லை.”
எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உண்மை முகத்தை மகாத்மா காந்தி நன்கு அறிந்திருந்தார். 1946 ஆம் ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரம் குறித்து மகாத்மா காந்தியின் சிஷ்யர் ஒருவர் கூறும்போது, “ஹிட்லர் தலைமையின் கீழ் பணியாற்றிய நாஜிக்களாகவும், முசோலினி தலைமையின் கீழ் பணியாற்றிய பாசிசவாதிகள் போல ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாறுவார்கள்” என்றார்.
ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைஷர் தலையங்கத்தில், சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸை கலைத்துவிட மகாத்மா காந்தி விரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்துத்தான் காந்தியடிகளின் மரபுரிமையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோருகிறார்கள்.
‘கடைசி விருப்பமும் ஏற்பாடும்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தி எழுதிய கட்டுரை, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி, அதாவது அவர் படுகொலை செய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியானது. இதில், சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னாரா? என்பதற்கு விடை உள்ளது.
இறக்கப் போகிறோம் என்று தெரியாமலேயே 1949 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி எழுதிய தமது கட்டுரைக்கு ‘கடைசி விருப்பமும் ஏற்பாடும்’ என மகாத்மா காந்தி தலைப்பு வைத்திருக்கிறார். சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாமா என்ற கருத்து, 1946 இல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட, சுதந்திர இந்தியாவில் காங்கிரஸின் பங்கு என்ற விவாதத்தின் ஒரு பகுதியாகும். பல தலைவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். மகாத்மா காந்தியும் அந்த விவாதத்தில் தன் பங்களிப்பை அளித்தார்.
இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துகளைத்தான் பிப்ரவரி 2, 1948 ஆம் ஆண்டு தமது ஹரிஜன் பத்திரிகையில் இந்த கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இது மகாத்மா காந்தியின் மற்றொரு பிரகடனமாக இருந்தது. அதில் அவர் கூறும்போது:
” இந்திய தேசிய காங்கிரஸ் பழமையான அரசியல் அமைப்பு. உயிரிழப்புகள் இல்லாமல் வன்முறை இல்லாத பல போராட்டங்களை விடுதலைக்காக நடத்திய காங்கிரஸ் கட்சி மரிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த கட்சி தேசத்தோடு மட்டுமே மரிக்கும்.”
‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கத்துடன் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடியபோது மகாத்மா காந்தி இந்திய மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அவரது மரபுரிமை கோரட்டும்.
இதோ அந்த வாக்குறுதி:
”இந்தியாவில் பிறந்து வளர்ந்த எல்லோருக்கும் இந்தியா சொந்தமானது. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு நாடு இல்லை.. சுதந்திர இந்தியாவில் இந்து ராஜ்யம் இருக்காது…”
இந்த வாக்குறுதியை பா.ஜ.கவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நிறைவேற்றுவார்களா?
தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஒட்டுமொத்த நாட்டையே மிரட்டவில்லையா? இதுதான் மகாத்மா காந்தியின் உண்மையான வாக்குறுதியா? இதயத்தில் கை வைத்து பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதற்கு பதில் தரட்டும்.
தண்ணீரைப் போன்ற வாழ்க்கையில் எதையும் கலந்துவிடக் கூடாது என்று கூறியவர் மகாத்மா காந்தி. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறுவது, அம்மாநில மக்களின் சிவில் உரிமைகளை மறுப்பது போன்ற செயல்கள் மகாத்மா காந்தியின் மரபுரிமையுடன் ஒத்துப் போகிறதா?
தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று மிரட்டுவது, மகாத்மா காந்தியின் வாக்குறுதிக்கு எதிரானது அல்லவா?
”வாழ்க்கை தண்ணீர் போன்றது. அதில் எதையும் கலந்துவிடக் கூடாது” என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பது மகாத்மா காந்தியின் வாக்குறுதியை மீறுவது ஆகாதா?
மகாத்மா காந்தியின் அனைத்து வாக்குறுதிகளையும் மீறிவிட்டு, அவரின் மரபுரிமையை கோர ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு என்ன தகுதி இருக்கிறது?
Well written and articulated. Can I translate this in English and post it in my Facebook Page?
Thanks, Go ahead!